Friday, May 30, 2025

கடந்தகாலமற்ற மனிதன்

 

கடந்தகாலமற்ற மனிதன்

-----

2007 இல்தான் இந்த விபரீதம் நிகழ்ந்தது... காலச் சமன்பாடு பற்றி  ஒரு நிறுவல் செய்ய முயற்சி செய்து கொண்டிருந்த, 40 வயதான கணிதன் தன் வேலையில் ஒரு அலுப்புத் தட்டவே புத்தக அடுக்குகளில் சும்மா தேடி ஒரு நூலைக் கையில் எடுத்து வாசிக்கத் தொடங்கினான்..

அது, 1933  இல் ஜெர்மனை ஆட்சி செய்த சர்வாதிகாரி  ஹிட்லரின் போர் வரலாறு.. அதில் ஹிட்லர் செய்த படுகொலைகள் பற்றி விலாவரியாக எழுதப்பட்டிருந்தது.. இதை வாசிக்க வாசிக்க கணிதனுக்கு  சர்வாதிகாரி ஹிட்லர் மீது கடும் கோபம் வந்தது..இந்நூலை எழுதிய நூலாசிரியரின் பெயரைப் பார்த்தவன் திடுக்கிட்டு விட்டான்..  ஏனெனில், நூலாசிரியர் பெயர் கணிதன் என்று அவனது பெயர்  இருந்தது.. நாம் எப்போது இந்தப் புத்தகத்தை எழுதினோம் என்றே அவனுக்கு விளங்கவில்லை..  ஆத்திரத்துடன்,  புத்தகத்தை மேலும் வாசிக்காமல் தூக்கி எறிந்த கணிதன் மீண்டும் தன் வேலையில் ஈடுபட்டான்.. எனினும், தான் எழுதாத, எழுதிய ஞாபகமே இல்லாத அந்நூல் பற்றியும்,  ஹிட்லர் பற்றிய நினைவுகளும்  அவனை அலைக்கழித்தன. கொஞ்சம் பயமுறுத்தின..

உடனே, தன் வேலைத்தளத்தை விட்டும் வெளியே வந்த கணிதன் அடுத்த தளத்துக்குள் சும்மா நுழைந்து பார்த்தான்.. அங்கே, ஒரு முதியவர் ஏதோ ஒரு எந்திரம் அருகே நின்றுகொண்டு சின்னச் சின்ன வேலைகள் செய்து கொண்டிருந்தார்.  அது, விலைகூடிய மேக்நோட்டியம் என்னும் உலோகத்தால் அமைக்கப்பட்டிருந்தது, அதன் முன்முகம் ஒரு பெண் முகம் போல அமைக்கப்பட்டு  இருந்தது, பக்கத்தே, கழுகுகளின்,  சிறகுகள் போல இரு இறக்கைகள் விரிந்தும் ஒடுங்கியும் இருந்தன..  அடியில், ஒரு  குதிரையின்  கால்கள் போன்ற அமைப்பில், நான்கு நிலைநிறுத்திகள்  இருந்தன.  பார்ப்பதற்கு   மனிதன், பறவை, மிருகம்  ஆகிய மூன்று  உருவங்களின்  அமைப்பில், விசித்திரமாக காட்சி தந்தது அந்த எந்திரஉருவம். இவன் உள்ளே வந்த ஆளவரம் கேட்டதும் முதியவர் திரும்பினார்.  

‘இதன் பெயர்  ‘பர்க்’.. அதாவது நம் மொழியில் மின்னல் என்று அர்த்தம்’’  என்று இவன் கேட்காமலே சொன்னார் அந்த முதியவர்...

இது எதற்கான இயந்திரம் பெரியவரே? என்று கேட்டான் கணிதன்.

இது காலரதம்களில் எல்லாம்  மிகவும் அதி தொழினுட்பத்தில் உருவானது.. விண்வெளி ஓடங்களில் இது மிகத் துல்லியமானது.,  காலத்தில் பின்னோக்கி பயணிக்க கூடியது..அல்லது சுழலின் திசையைப் பொறுத்து முன்னோக்கியும் செல்லலாம்.. . இருப்பினும், திண்மை மற்றும் வேகம் ஆகியவற்றிற்கு அசாதாரண பருண்மைகள் கொண்டதால், இது  வலுவாக கட்டமைக்கப்பட்டுள்ளது.. அதற்காகத்தான் முயற்சித்துக் கொண்டிருந்தேன்..வெற்றியும் அடைந்தேன்.  இது போன்ற ஒரு சாதனம் பேரண்ட இழையை மீறிச் செல்லும்.  இதை போல ஒன்றை  இதற்கு முன் யாரும் உருவாக்கி  இருப்பதாக தெரியவில்லை ,   ஒளி வேகத்தில் இது பயணிக்கும்.. இதில் ஏறிக், கடந்த காலத்துக்கு இலகுவில், ஒளி வேகத்தில்,  சென்று வர முடியும் .

இதில் 1900 களுக்குச் செல்ல முடியுமா பெரியவரே..

முடியும்.. காலத்துக்குப் பின்னோக்கி எத்தனை ஆண்டுகளுக்கும் செல்ல முடியும்.. முன்னோக்கிச் செலுத்தும் முயற்சியில்தான் நான் முயன்று கொண்டு இருக்கிறேன்..

நான் 1900 களுக்குச் செல்ல விரும்புகிறேன் பெரியவரே..

ஏன் குறிப்பாக 1900?

நான் ஹிட்லரைக் காண வேண்டும். அவரைக் கொல்ல  விரும்புகிறேன்.

‘’உன் விபரீதமான நோக்கம் நிறைவேறாது என்றே நினைக்கிறேன்.. அது உன்னால் முடியுமோ தெரியாது.. எனினும் முயற்சி செய்து பார்... இதில் ஏறு

மறக்காமல் ஒரு லேசர்க் கைத்துப்பாக்கியையும் எடுத்துக் கொண்ட கணிதன் அதற்குரிய உடைகளையும் அணிந்து கொண்டான். .  முதியவர், இவனை விசித்திரமாகப் பார்த்தபடியே,  1900 களுக்குச் செல்லும் ஆளிகளை இயக்கினார்.. அடுத்த கணத்தில், கணிதன், ‘பர்க்’கில்  ஏறிப் பறந்தான்.  சர்வாதிகாரிக்கு என் கையால்தான் சாவு.. இதோ வருகிறேன்  அடோல்ப் ஹிட்லரே...

௦௦

1933  ஜனவரி 30.. ஹிட்லர் நாசிப் படைகளின் மத்தியில் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார்.. ..  காலரதமான ‘பர்க்’  மிகச் சரியாக ஹிட்லரின் தலைக்கு, ஐம்பது அடிகள்  மேல் வந்து நிலையாக நின்றது. உடனே, கணிதன் தன் கைத்துப்பாக்கியை எடுத்து ஹிட்லரைக் குறி வைத்தான். விசையை அழுத்தப் போகும் ஒரு கணத்தில் ஹிட்லரின் முகத்தைப் பார்த்தவன்  மிக அதிர்ச்சியில் உறைந்து போனான்.. காரணம்  அங்கு இராணுவ உடையுடன்,  நாஜித் தொப்பி அணிந்து உரை நிகழ்த்திக் கொண்டிருந்தது அவன்தான்.. ஆம், கணிதன்தான்...

விசித்திரமான ஒரு அதிர்ச்சியுடன், அங்கு ஹிட்லர் என்ற பெயரில்  உரைநிகழ்த்திக் கொண்டிருந்த தன்னையே ஒருகணம்  பார்த்தான்.  சுட்டால், நானே இறந்து விடுவேனோ என்ற பயத்தில் ஒரு கணம் தயங்கினான். ஆனால், வருவது வரட்டும் என்ற துணிவுடன் ,  லேசர் துப்பாக்கியை எடுத்து ஹிட்லர் என்னும் தன்னை   நோக்கிச் சுட்டான் கணிதன். ஆனால், அந்த லேசர் கதிர்க் குண்டினால்,  எந்த ஒரு பாதிப்பும் ஹிட்லருக்கோ அல்லது தனக்கோ  ஏற்படவில்லை என்று கண்டான்.  அவர் தொடர்ந்தும் உரைநிகழ்த்திக் கொண்டிருந்தார். ஏன் அப்படி?   வெகுண்டெழுந்த கணிதன் மீண்டும் மீண்டும் சுட்டான்... ஆனால் எந்த ஒரு சலனமும் ஹிட்லரில் ஏற்பட்டிருக்கவில்லை.

கோபத்தின் உச்சத்தில், கணிதன்   ‘பர்க்’கை விட்டு ஒரே பாய்ச்சலில் ஹிட்லர் என்னும் தன்  தலையின் மீது தானே  குதித்தான்.  ஹிட்லர் தன் தலையைத் தடவி விட்டபடி,  உரையைத் தொடர்ந்து கொண்டிருந்தார். இவன் ஒருத்தன் குதித்ததையே அவர் சட்டை செய்யவில்லை போல இருந்தது.. படைகளும் இவனைக் கண்டுகொள்ளவேயில்லை.

எக்காரணம் கொண்டும் எதனாலும் தான் என்னும் ஹிட்லரைக் கொல்ல முடியாதென்று  இறுதியில், உணர்ந்தான் கணிதன். அளவுகடந்த வெப்புசாரத்துடனும் பச்சாதாபத்துடனும் மீண்டும், ‘பர்க்கில்’  ஏறி 2007 க்குத் திரும்பினான் கணிதன்.

ஹிட்லரைத்  தன்னால் எப்படிக் கொல்ல முடியாமல் போனது..?  நான் ஏன் ஹிட்லராக மாறி இருந்தேன்..?  அந்த முதியவரும் ஹிட்லரைக் கொல்ல முடியாது என்றுதானே சொன்னார்.. ஏன்?  ஒருவேளை தான் ஹிட்லரைக் கொல்ல முடிந்திருந்தால் இரண்டாம் உலகப் போர்தான்  நடந்திருக்காதே...  பொது மக்கள் இலட்சக் கணக்கில் அழிந்திருக்க மாட்டார்கள்... ஹிட்லரின் கொடுமை பற்றி  புத்தகம் எழுதப்பட்டிருக்காது.. தான் அதை வாசித்திருக்க மாட்டோம்... ஆத்திரம் வந்திருக்காது.. ஹிட்லரைக் கொல்ல ‘பர்க்கில்’ ஏறியிருக்க மாட்டோம்.... என்றெல்லாம்  யோசித்த கணிதன்  யோசனை முடியும் முன்னரே,  அந்த முதியவரின்,  தளத்தில், போய் இறங்கினான்.  இவனைக் கண்ட  முதியவர்,

‘’ஏற்கனவே நான் சொன்னேன்தானே ... இதுதான் ‘பட்டாம்பூச்சி விளைவு’ என்பது.. நீ அதை உணரவில்லை.. உலகப் போக்கை மாற்ற, உன்னாலும், மற்ற  யாராலும் முடியாது..’’

 என்று சொன்னார்..   அந்த முதியவரைக் கண்டு திடீரென  அதிர்ச்சியடைந்தான் கணிதன் .. ஏனெனில் அங்கு முதிய தோற்றத்தில் இருந்தவர்  கணிதன்தான்..

00

 

Friday, May 23, 2025

மூடப்பெற்ற காலம் போன்ற வளைவுகள்

 

மூடப்பெற்ற காலம் போன்ற வளைவுகள்

-----

            இது கி.மு. 480 களின் பிற்பகுதி..  ஜெருஸ்ஸலத்தின் ஒரு பசுமைக் கிராமமான லவண்ட்டின்  ஒரு ஒற்றையடிப் பாதை வழியாக இருவர் நடந்து வந்து கொண்டிருந்தனர்..  இருவரும் உடன்பிறந்த சகோதரர்கள்.. ஒரு தாய்க்கு, ஒரே சூலில் பிறந்த இரட்டையர்கள். இருவருக்கும் 30 வயதுதான் ஆகிறது. ஒருவர் உஷைர். மற்றவர் அஷீஸ்..இவர்களுடன் கூடவே  அவர்களின்  கழுதையும் வந்துகொண்டிருந்தது..

மன்னன் புக்துநசரின் படையெடுப்பில், ஜெருசலம் சின்னாபின்னமாகிக் கொண்டிருந்த காலம் அது.  அவனது படைகளின் கொடுமையில்  இருந்து தப்பிச் செல்லும் நோக்கத்தில் இருவரும், பயணத்துக்குத் தயாரான கழுதையுடன்  வேகமாக நடந்து கொண்டிருந்தனர்.. இடையில் வைத்து  உஷைர் சொன்னார்,

‘’சகோதரர் அஷீசே, இனி போனீசியக் காடு வந்துவிடும். அதற்குள் நுழைந்து நான் இக்கழுதையில் ஏறிச் சென்று விடுகிறேன்.. நீர் வீட்டுக்குத் திரும்பிச் செல்லும்.. உமக்கு படையினரால் ஒரு ஆபத்தும் வராது.. தௌராத் வேதத்தை மனனம் செய்து வேத பராயனராக உள்ள என்னைத்தான் அவர்கள் கொல்லத் தேடிக் கொண்டிருப்பார்கள்..’’

‘’ஆம், சகோதரரே, நீர் ஒரு தீர்க்கதரிசி என்றும் இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்ட மனிதப் புனிதர் என்றும் எல்லோருக்கும் தெரியும்.  மக்கள் உம்மை ஒரு வழிகாட்டியாக கொண்டுள்ளனர்..நம் வேதத்தையுடையோரை மன்னன் கொன்றொழித்து வருகிறான்.. நீர் சிறிது காலம் சென்று, இந்த மன்னரின் கொடுமைகள் ஓய்ந்து அமைதி திரும்பிய பின் மீண்டும் வர வேண்டும்.’’

‘’நிச்சயமாக வருவேன். நான் விடைபெற்றுக் கொள்கிறேன்’’

‘’இதோ, இதில் உமக்காக சில அத்திப் பழங்களும், திராட்சைப் பானமும் இருக்கின்றன. பெற்றுக் கொள்ளும்..கடைசியாக ஒரு வேண்டுகோள்..சகோதரரே.. உமது முதுகில் நீர் ஒரு தீர்க்கதரிசி என இறைவன் பதித்து விட்ட முத்திரையை ஒரு தரம் எனக்குக் காட்டுவீராக.. அதை நான் முத்தமிட்டு விடைபெறுகிறேன்’’

‘’இதோ.’’

தீர்க்கதரிசி உஷைர் தம் மேலாடையை விலக்கி முதுகை காட்டினார்... முதுகில்  இருந்த அந்த நபித்துவ முத்திரையை ஆசைதீர முத்தமிட்டு விட்டு, கண்ணீர் பொங்க விடைபெற்றார் அஷீஸ்.. கழுதையில் ஏறி அடர்வனத்துக்குள் நுழைந்தார் உஷைர்.

௦௦

அடர்ந்த ‘தயர்’ காட்டின் வழியாக, கழுதையுடன் நடந்துகொண்டிருந்தார் தீர்க்கதரிசி உஷைர். அவரது மனம் முழுவதும் பிரபஞ்சத்தின் படைப்புகள் பற்றிய ஞானத்தில் இலயித்துக் கொண்டேயிருந்தது.

இடையிடையே, மன்னன் புக்துநசரின் படையினரால் அழிக்கப்பட்ட  போனீசிய நகரின் மீதான நினைவுகள் அவரை அலைக்களித்தன.. பிரபஞ்சத்தின் படைப்பாளனின் வல்லமையில் மனம் ஒன்றிக்க அவரால் சிரமமாக இருந்தது.. நீண்ட தூரம் வனத்துக்குள் நடந்து வந்த,  அவருக்கும் கழுதைக்கும் சிறிது ஓய்வு தேவைப்பட்டது. சுற்றிலும் பார்த்தார். நல்ல ஒரு விருட்சம் நிழல் பரப்பி குளிர்மையாக இருந்தது.. அதன் அடியில் போய் அமர்ந்து கொண்டார்..கொண்டு வந்திருந்த அத்திப் பழங்களையும், திராட்சைப் பானத்தையும் சிறிது அருந்திவிட்டு,  மீதியை பக்கத்தில் வைத்துக் கொண்டார்...   கொஞ்சம் வசதியாக சாய்ந்து கொண்டார். கழுதையும் அவர் அருகிலேயே சாய்ந்து படுத்துக் கொண்டது...

அழிந்து சிதிலமாகிவிட்ட தன் போனீசிய நகரை எண்ணிப் பார்த்தார். .. அவரது மனம் இந்நகரின் அழிவில் துயருற்று மாய்ந்தது.. அழிந்த நகரை பிரபஞ்ச படைப்பாளனால் மீண்டும் உயிர்ப்பிக்க முடியுமா...?  இந்த சிந்தனை  வந்ததும் உஷைரின் மனம் துணுக்குற்றது.. பிரபஞ்சப் படைப்பாளனின் வல்லமையில் சந்தேகம் கொள்கிறோமா என்று தன்னையே கடிந்து கொண்டார் உஷைர்.. அடுத்த கணத்தில், உடல் வியர்த்து,  நடுக்கமும் திகிலும் அவரை ஆட்கொண்டன.. அவருக்குள்ளேயே  ஓர் அமானுஷ்ய குரல் ஒலித்தது போலிருந்தது..

‘’யா, உஷைரே.. எமது வல்லமையில் சந்தேகம் கொண்டீரா...?

திடுக்குற்று எழுந்தார் உஷைர்.. ஆ, உக்கிப்போன எலும்புகளையும்  உயிர்ப்பித்தெழ வைக்கின்ற வல்லமையின்மீதே சந்தேகமா...?  திடீரென உஷைருக்கு தூக்கத்தில் கண்கள்  சொருகத் தொடங்கி விட்டன.. சடுதியான ஒரு நெடுந்தூக்கத்தில் ஆழ்ந்தார் அவர்.. காலம் அவரை மூடிக் கொண்டது..

௦௦

காலம் அவரை மூடிக் கொண்டது.. மகா வல்லமை, உஷைருக்குத் தன்  வல்லமையின் ஒரு துளியை காட்டத் திருவுளம் கொண்டது.. உடனே உஷைரும் மீதியாயிருந்த அத்திப் பழங்களும், பானமும், மகா வல்லமையின் கட்டளைப்படி,   காலரதத்தில் ஏற்றப்பட்டன.. காலரதம் பிரபஞ்ச வெளியின் ஊடே, ஒலியின் வேகத்தையும் மிஞ்சி கணிக்க முடியாக் கதியில் விரைந்தது..  பரவெளியில், ஆதிச்சுழல் கடந்து மிதந்துக்கொண்டிருந்த பிரம்மாண்ட கருந்துளையை ஒரு சுற்றுச் சுற்றிப் பின் மீண்டும் பூமி நோக்கி பிரபஞ்ச நேரம்  மூன்றே வினாடிகளில் திரும்பியது..

காலரதம் சென்று வந்த தூரம் நானூறு ஒளியாண்டுகள்.. அதன் திசை வேகம் v = 80% of light (0.8 c) ஆகும்.., இந்த பயணத்தின் நேரம் பூமியின் நேரப்படி காலரதத்திலுள்ள காலக் குறிகாட்டியினால்  குறிக்கப்படுமாயின், இந்தப் பயணத்திற்கான நேரம் t = 2d/v = 100ஆண்டுகள், எனப் பிற்கால , லாரன்ஸ் குறைப்பு காரணி (εயினால் கணிக்கப்பட்டது..

இந்த மதிப்பை பிரதியிட்டால் கிடைப்பது பிரபஞ்சத்தின் 3 வினாடிகள் பூமியில் 90  வருடங்கள் ஆகும்.. இதன்படி ஒரே வயதான  இரட்டையர்களில் ஒருவர் பூமியிலும் இன்னொருவர் காலரதத்திலும் வாழ்ந்தால், பூமியிலுள்ள நபருக்கு  130 வருடங்கள் சென்றிருக்கும் போது,  காலரத்திலுள்ளவருக்கு வெறும்  9 வினாடிதான் கழிந்து இருக்கும். (இந்த முரண்பாட்டை தான் ஐன்ஸ்டின் இரட்டை முரண்பாடு (Twin Paradox) என்கிறார்.)

௦௦

சட்டெனக் கண் விழித்தார் உஷைர்...ஆ, என்ன இது.. அவரின் அருகே அவருடன் வந்த அந்தக் கழுதை இறந்து உக்கிப் போய், மண்ணோடு மண்ணாகி விட்டிருந்தது.  சில எலும்புகள் மட்டுமே  அங்கு கிடந்தன... ஆனால், அவருக்குப் பக்கத்தில், அவர் அருந்திவிட்டு மீதி இருந்த அத்திப் பழங்களும், திராட்சைப் பானமும் கெட்டுப் போகாமல் அப்படியே இருந்தன... என்னபுதுமை இது... ஒரு கொஞ்ச நேரம்தானே தூங்கி எழுந்தேன்...என் கழுதை எப்படி இறந்து உக்கியது.?

‘’எத்தனை ஆண்டுகள் தூங்கினீர் யா உஷைரே..?’’

‘’ஆ..எந்தன் எஜமானே.. மகா சக்தியே.. ஒரு சொற்ப நேரம்தான்..சில வினாடிகள்தான் இருக்கும் என் எசமானே..ஆனால் என்கழுதை இறந்து உக்கிக் கிடக்கின்றதே... என் உணவு மட்டும் அப்படியே கெடாமல் இருக்கின்றதே.. எனக்கு ஒன்றும் புரியவில்லை என் எசமானே..’’

‘’இல்லை.. சரியாக ஒரு நூறு ஆண்டுகள் தூங்கினீர் உஷைரே..’’

உஷைர் அப்படியே தலை குப்புற விழுந்து சாஷ்டாங்கம் செய்தார்..

‘’பரிசுத்தமிக்க மாபெரும் வல்லமையே...இந்த இழிவான அடியானை  மன்னித்துக் கொள்க. உம் வல்லமையின் மீதே சந்தேகம் கொண்ட இந்த அற்ப மானுடனின் பிழையைப் பொருத்தருள்வீராக.. இந்த அடிமை உம் வல்லமையை புகழ்கின்றேன்  எஜமானே.. என் சந்தேகத்துக்கு என்னை மன்னித்து அருள்க..’’

‘’உமது ஊருக்கு திரும்பிச் செல்லும் உஷைரே.. இதோ உமது கழுதையும்  உயிர் பெற்று எழுகின்றது..’’

‘’கோடா கோடிப் பிரபஞ்சங்களுக்கும்   சக்தியாய்  விளங்கும் மகா வல்லமையே..உமைப் போற்றித் துதிக்கிறேன். இனி ஒரு துளி சந்தேகமும் கொள்ளமாட்டேன்..’’

உஷைர், எழுந்தார்... நூறு வருடங்கள் கடந்து சென்று விட்ட  தன் ஊரை நோக்கி நடக்க ஆரம்பித்தார்...

௦௦

ஒரு நூறு வருஷத்துக்கு முன் அழிந்து கிடந்த நகரம் இப்போது பிரம்மாண்ட மாநகரமாக வளர்ச்சி அடைந்திருப்பதைப் பார்த்து வியந்தபடியே, தன்   இரட்டைப் பிறவியான சகோதரனை தேடி நடந்தார் உஷைர்.... மிகவும் சிரமத்தின் பின்னர்  சகோதரனின் வீட்டை விசாரித்துக் கண்டறிந்தார்.  சென்று கதவைத் தட்டினார்..

‘யார் நீங்கள்?’’ வீட்டின் உள்ளிருந்து 130 வயதுடைய ஒரு வயோதிபர் வந்தார்..

‘’நான் உஷைர்.. என் சகோதரன் அஷீசை தேடி வந்தேன்’’

‘’நான்தான் அஷீஸ்..ஆனால் உம்மை எனக்குத் தெரியவில்லையே...’’

‘’நான் உஷைர்தான்..’’ என்ற உஷைர் தனக்கு நிகழ்ந்த சம்பவத்தை அஷீசிடம் விளக்கிக் கூறினார்.. ஆயினும் அஷீஸ் இதனை நம்பவில்லை..நம்பாமலும் இருக்க முடியவில்லை..

‘’ஆனால், நீர் 30 வயது வாலிபனாக அன்றோ இருக்கின்றீர்.. சரி எதற்கும், என் சகோதரன் உஷைரின் முதுகில் இருந்த தீர்க்கதரிசிக்கான முத்திரை   உம்  முதுகில் இருக்கின்றதா.. அதைக் காட்டும் பார்ப்போம்..அப்படியானால் நான் நம்புகிறேன்’’

            உடனே, உஷைர் புன்முறுவலுடன் தன் முதுகின் மேலாடையை விலக்கிக் காட்டினார்.. அங்கே, தெளிவாகப் பதிக்கப்பட்டு இருந்தது அந்த நபித்துவ முத்திரை..

‘’ஆ..என் சகோதரனே..’’ எனக் கூவியபடியே 30 வயது உஷைரை, அணைத்துக் கொண்டார் 130 வயதான அஷீஸ்..

௦௦