Wednesday, June 18, 2025

படியெடுப்பு

படியெடுப்பு

 

‘’முக்கால் மணி நேரமாக சொல்லிக் கொண்டேயிருக்கிறேன்..என்னுடைய பிரச்சினையை நீங்கள் இன்னும் சரியாகப் புரிந்து கொள்ளவேயில்லை  டாக்டர். ..’’ என்று  ஆத்திரத்தில் எகிறினான் ராஹேல்.

‘’நன்றாகப் புரிகிறது மிஸ்டர்,ராஹேல்.. உன் இணையனை அறிய விரும்புகிறாய் அதானே....’’

‘’ஆம். அதுவும் அதி சீக்கிரமாக...எல்லா விஷயங்களிலும் என் இணையன் என்னை  முந்திக் கொள்கிறான். நான் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்த போது என் டீ.என்.ஏ. அட்டையைப் பார்த்து ஏற்கனவே எனக்கு வழங்கபட்டுவிட்டதாகச் சொல்லி என் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. எனக்கான ஆதாரப் பணம் நான் இரண்டு தடவை பெற்றதாகக் கூறி நிறுத்தப்பட்டுள்ளது. இப்படி எத்தனையோ தொல்லைகள்..  நேற்றும் விமான டிக்கட்டுக்கு, கணினியில் ‘புக்’ பண்ணிய போது என் டீ.என்.ஏ அட்டையை பரிசோதித்த அதிகாரி நேற்றே நான் டிக்கட் வாங்கி விமானத்தில் ஏறி விட்டதாக சொன்னான்.. என்னால் டிக்கட் பெற முடியவில்லை..’’

‘’அதெல்லாம்தான் சொல்லிவிட்டாய். நிறுத்து. உன்னைப் போன்ற ‘சைக்கோட்’டுகள்  சிலரால் இது உலகத்தில், இந்த முப்பதாம் நூற்றாண்டில்  ஒரு நவீன பிரச்சினையாக உருவாகியிருக்கிறது.. உன் தாயிலிருந்து ஒரு மூலக்கூறை பிரித்து, உன்னைப் போல இன்னொரு உயிரையும்  உருவாக்கியிருக்கின்றனர்.  அந்த உயிரும் வளர்ந்து இப்போது எங்கோ  உன்னைப் போலவே இருந்து கொண்டு வாழ்கிறான். உன் மூலக்கூறின் அதிசயப் படியெடுப்பு அவன்’’

‘’என் இரட்டையனா?’’

“ஏறக்குறைய அப்படித்தான்.. ஆனால், சொற்ப வித்தியாசம் இருக்கலாம்..உன் கண்கள் மஞ்சள்.. அவனது கண்கள் நீலமாக இருக்கலாம். . இப்படி மிகச்சிறிய வித்தியாசம்..’’

இது எப்படி நிகழ்ந்திருக்கும் டாக்டர்?’’

‘’ உன் தாயார் ஏதோ ஒரு சொற்ப பணத்துக்கு ஆசைப்பட்டு  இதற்குச் சம்மதித்திருக்கலாம்.. படியெடுப்பு, மூன்று வெவ்வேறு நிலைகளில் செய்யப்பட்டிருக்கலாம் ராஹேல். அவை மூலக்கூறு படியெடுப்பு,, உயிர்படியெடுப்பு, மற்றும் சிகிச்சைக்கான கலப்படியெடுப்பு  அதாவது உயிரணுக்கல மறுவுருவாக்கம்.. துரதிர்ஷ்டவசமாக, நமது  யூதமதம் மட்டுமே இதனை அனுமதித்திருப்பதால் இப்படி  ஒரு ஜெனரேசன் நம் நாட்டில் மட்டுமே வந்து விட்டது.. இதில் நீ எந்த வகையினன் என்று அறிந்து சொல்ல  கொஞ்ச நேரமாகும்....’’

‘’காத்திருக்கிறேன்.. இவன் தற்போது எங்கே இருக்கிறான் என்பதையும் நீங்கள் கண்டுபிடித்துத் தரவேண்டும்.ப்ளீஸ்.’’

‘’முயற்சிக்கிறேன்... சிலவேளை  உன் இணையனும் உன்னைப் போலவே உன்னைத் தேடிக் கொண்டிருக்கலாம் ராஹேல்..’’

‘’ஏன் அப்படி?’’

‘’ஏனெனில், உங்கள் இருவரின் உடலமைப்பு தவிர உணர்வுகளும் ஒரொரு சந்தர்ப்பத்தில் ஒத்தியங்கவும் கூடும்..நீங்கள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் அன்னியோன்ய அன்பாக இருப்பீர்கள் அல்லது அதீத விரோதிகளாகவும் இருக்க சாத்தியம் உண்டு.. சரி, நீ அவனைக் கண்டு பிடித்து என்ன செய்யப் போகிறாய் ராஹேல்?’’

‘’எனக்கான உரிமைகளை, சந்தர்ப்பங்களை இருவரும் சமமாகப் பிரித்துக் கொண்டு வாழ அவனுடன் ஓர் ஒப்பந்தம் செய்யலாம் என எண்ணுகிறேன் ..’’ என்றான் ராஹேல். ஆனால் அவனுக்குள் வேறொரு இரகசிய திட்டம் இருந்தது.

௦௦

இவர்கள் இப்போது பேசிக்கொண்டிருக்கும் இடத்திலிருந்து சுமார் முன்னூறு கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள ஹைபா  மாநகரத்தின், மரியர் அகல வீதியில், 410 ஆம் இலக்க அடுக்கு மாடித் தொகுதியின்,  72 ஆம் மாடியில் அமைந்திருக்கும்,’’அமைதிக்கான கண்டுபிடிப்பு’’ நிலையத்தின் அறையில், கண்டுபிடிப்பாளர் மீனாஷூவின் முன், நீலநிறக் கண்களுடன்  அமர்ந்திருந்தான் எஸ்தர்.

‘’இலகுவாகக் கண்டுபிடித்து விடலாம் எஸ்தர்..’’  என்ற கண்டுபிடிப்பாளர் மீனாஷூ சொன்னாள், ‘’உன் டீ.என்.ஏ. அட்டையைக் கொடு.. பணமாக  இருபத்திரண்டு லட்சம் ‘பே’  பண்ணு. ‘’

‘’சரி’’

‘’ஏன் அவனைத் தேடுகிறாய் எஸ்தர்..? ஸோர்றி .. இந்தக் கேள்விக்கு நீ பதில் அளிக்கவே வேண்டும். போர்மட்டில் கேட்டிருக்கு’’

‘’அவன் என் சகோதரன். ஒரு போதும் அவனை நான் பார்த்ததில்லை. தவிரவும் என்னுடைய டீ.என்.ஏ. அட்டை 99 சதவீதம் அவனுடையதை ஒத்திருப்பதால் எனக்கு பல வேலை வாய்ப்புக்கள் மறுக்கப்படுகின்றன. திருமணம் முடிக்கக் கூட முடியவில்லை.. இதுபற்றி அவனுடன் பேசி ஒரு முடிவுக்கு வர எண்ணுகின்றேன்..’’ என்று சொல்லிக் கொண்டே தன் நீலக் கண்களை மூடிக் கொண்டான் எஸ்தர்.. கண்களில் பொய்யை கண்டுபிடித்து விடுவாளோ என்ற பயத்தில்...

‘’உன் தாயார் யார்.. என்ன தொழில் செய்தாள்? இதற்கு நீ பதிலளிக்கத்  தேவையில்லை..சும்மா தெரிந்து கொள்ளத்தான் கேட்கிறேன்.’’

‘’அவள் யாரென்றே எனக்குத் தெரியாது..இந்த இரட்டையன் எப்படி பிறந்தான் என்றே குழப்பமாக இருக்கு..’’

‘’ஏன் கேட்டேன் என்றால், நீ படியெடு உயிரித் தொழில்நுட்பம் மூலமாகத்தான்  உருவாகியிருக்கிறாய்..’’

அப்படியானால்?’’

‘’உயிரியல்படியெடுப்பு .. அதாவது  மரபியல்  ரீதியில் ஒன்றையொன்று ஒத்த உயிரியல் பொருள்களை படியெடுப்பது. உயிரணு மூலக்கூறுகள், உயிரணுக்கள், உயிரணுக் குழுக்கள் போன்றவை ஒரு தனி மூதாதையிலிருந்து உருவாக்கப்படும் செயல்முறை... ஒரு உயிரியல் பொருளிலிருந்து அதனையொத்த உயிரணு அமைப்பை உடையதாய் படியெடுக்கப்பட்டவை படியெடுக்கப்பட்ட உயிரியல்பொருள் எனப்படும். அதுதான் நீ’’

‘’எனக்குப் புரியவில்லை மேடம்’’

‘’சரி அது உனக்குத் தேவையுமில்லை..  பணத்தைக் கட்டி விட்டு வெளியே உட்கார். அழைக்கிறேன்’

௦௦

‘’வாழ்த்துக்கள் ராஹேல்... இதோ நீ கேட்ட தகவல்கள்.. உன் இணையன் பெயர் எஸ்தர்.. படத்தைப் பார்.. நான் சொன்னேனே நீலக் கண்கள் என்று..பார்த்தாயா.. இப்போது அவன், ஹைபா டவுனில்,  மரியர் அகல வீதியில், 410 ஆம் இலக்க அடுக்கு மாடித் தொகுதியின்,  72 ஆம் மாடியில் அமைந்திருக்கும், ’’அமைதிக்கான கண்டுபிடிப்பு’’ நிலையத்தின் அறையில் உட்கார்ந்திருக்கிறான்.. உன்னைத்தான் தேடிக் கொண்டு இருக்கிறானோ தெரியாது..’’

‘’வெரிகுட் டாக்டர். அவனது விலாசம் என்ன..?’’

‘’இதோ’’

‘’மிக்க நன்றி டாக்டர்.. நான் வருகிறேன்..’’

‘’வெல்கம்..பெஸ்ட் ஒப் லக் ‘’

00

 

‘’இதோ எஸ்தர் ... நீ கேட்ட தகவல்கள்.. உன் சகோதரன் பெயர் ராஹேல்.. மோசேயா டவுனில் இருக்கிறான். மற்றும் விபரங்கள் இதில் இருக்கின்றன..’’

என்று ஒரு கோவையை நீட்டினாள் மீனாஷு..

‘’தேங்க்ஸ் மேடம்...என் இரட்டைப்பிறவி பற்றிய தகவல்கள் எனக்கு ஆச்சரியமூட்டுகின்றன’’

‘’இதில் ஓர் ஆச்சரியமுமில்லை எஸ்தர். நீயும் உன் சகோதரனும் நிச்சயமாக சைக்கோட்டுகள்தான்... உனது  தாய் தனது உடல் திசுள் மரபணுவை கொண்டே ஒரு ஆணின் தேவையின்றி தனது குழந்தைகளை உருவாக்கிகொண்டிருக்கிறாள்.. சில பக்றீரியாக்களும் இப்படி தன்னிலிருந்தே தன்னை உற்பத்தி செய்வதில்லையா.. அதுதான் சைக்கோட்’’

‘’அப்படியா.. இந்த உலகத்துக்கு ஒருத்தனே போதும்.’’ என்று முணுமுணுத்தபடியே கோவையைப் பெற்றுக் கொண்டு, அவசரமாக வெளியேறினான் நீலநிறக் கண்ணன்  எஸ்தர்.

௦௦

அறைக்கதவு மெதுவாகத் தட்டப்பட்டது.. திறந்து பார்த்த எஸ்தர் அதிர்ந்து போனான். அச்சு அசலாக தன்னைப் போலவே நின்று கொண்டிருந்த ராஹேலை ஆச்சரியமாகப் பார்த்தான்.  

‘’அப்படியானால் என்னைத் தேடிக்கொண்டு வந்து விட்டாய்’’ என்றான் எஸ்தர்.

‘’ஆம் என் சகோதரனே..நமக்கிடையிலுள்ள விவகாரத்தை தீர்த்துக் கொள்ளலாம் என்று உன்னைத் தேடிக்கொண்டிருந்தேன்’’

‘நிச்சயமாக.!. வா.. உன்னைச் சந்தித்ததில் மகிழ்ச்சி.. உள்ளே வா’’

 உள்ளே வந்து அமர்ந்தான் ராஹேல்.. இடுப்பில் சொருகியிருந்த கைத்துப்பாக்கி உறுத்தியது..

‘’என்ன சாப்பிடுகிறாய் என் சகோதரனே’’ என்று கேட்ட எஸ்தர், ‘’புதிய இஸ்ரேலின் புதிய தயாரிப்பு இருக்கிறது.. கொஞ்சம் சாப்பிடுகிறாயா?’’

‘’சரி’’

‘’நம் பிரச்சினையைப் பேசிக் கொள்வோம். இப்போது கொஞ்சம் குடிப்போம். நம் தாய் செய்த தவறுக்காக..’’

என்ற எஸ்தர்  மதுக் கிண்ணங்கள் இரண்டை எடுத்துக் கொண்டு வந்து வைத்து விட்டு,  மீண்டும், புதிய இஸ்ரேலின் புதிய தயாரிப்பை எடுக்க  மற்ற அறைக்குள் சென்றான்.  சென்றவன் அதன் மூடியைத் திருகித் திறந்து,  ஆர்கானிக் விஷத் துளிகளை அதற்குள் விட்டு,  விரைவில் திரும்பி வந்தான்.

‘’அருமையான டிரிங்ஸ் இது சகோதரா..’’ என்றவாறே அதிலிருந்து கொஞ்சம் ஊற்றி ராஹேலிடம் நீட்டினான். தானும் கிளாசில் ஊற்றி வைத்துக் கொண்டான். இருவரும் சியர்ஸ் சொல்லி கிண்ணங்களை முட்டிக் கொண்டனர்.. ராஹேல் கண்ணை மூடிக் கொண்டு மடமடவெனக் குடித்து விட்டு, கிளாசை வைத்தான். எஸ்தர் குடிக்கவில்லை.

‘’ராஹேல்.. கடவுளைப் பிரார்த்தனை செய்து கொள்.. உன் விதி இவ்வளவு விரைவில் தீர்மானிக்கப்படும் என்று நான் நினைக்கவில்லை’’ என்றான்.

‘’நானும்தான்’’ என்ற ராஹேல் சட்டெனக் கைத்துப்பாக்கியை உருவி எஸ்தரின் தலையில் மூன்று முறை சுட்டான்.  இதைச் சற்றும் எதிர்பார்க்காத எஸ்தர் மூளை சிதறிக் கீழே விழுந்தான்.

அதே வினாடியில் ராஹெலின் வயிற்றுக்குள் ஏதோ தீப்பந்தம் போல் எரிந்து குமட்டிக் கொண்டு வர, வாயிலிருந்து இரத்தம் கொப்பளிக்க தனக்கு என்ன நடந்தது என்று தெரியாமலே கதிரையில் சாய்ந்தான். அந்த இறுதி வினாடியில் இருவரின் கண்களும் ஒருகணம் சந்தித்துக் கொண்டன..0

௦௦

 

 

 

 

 

 

 

Tuesday, June 3, 2025

பரஞ்சோதியின், பரகாயப் பிரவேசம்

பரஞ்சோதியின், பரகாயப் பிரவேசம்

 

‘’யாருக்கும் கிடைக்காத வெற்றி எனக்குக் கிடைத்திருக்கிறதடா என் நண்பனே....’’ என்று கூறி, பெருமிதத்தில் கசிந்த விழிநீரைத் துடைத்துக் கொண்டார் விஞ்ஞானி பரஞ்சோதி. தன் கையில் ஊர்ந்து கொண்டிருந்த சிவப்புக் கம்பளிப்புழுவை கொஞ்சம் தடவிக் கொடுத்தார்.

அதை அருவருப்புடன் பார்த்துக் கொண்டிருந்த அவரது நெடுங்கால  நண்பரான சட்டத்தரணி சிவானந்தன்,

‘’அட, மட விஞ்ஞானியே..’’ என வியந்து ஆச்சரியப்பட்டார். பின் சொன்னார்,   ‘’அதாவது, transporter எனும், மனிதனின் ஒவ்வொரு அணுவையும் இடம் பெயர்த்து இன்னோர் இடத்துக்கு அனுப்புகின்ற ஓர் ஆராய்ச்சியில் வெகு காலமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தாய்.. அதிலேயா வெற்றி கண்டிருக்கிறாய்? இதற்காகவா என்னை இங்கே வரச் சொன்னாய்?’’என்று கேட்டார்.

‘’அட,மக்கு.. அதில்லடா... இது வேறு.. இது teleportation... அதாவது பழைய புராணங்களில் சொல்வார்களே ..கூடுவிட்டுக் கூடு பாய்தல்..தெரியுமா உனக்கு?  அதாவது ஒரு மனிதனின் உடல் அப்படியே ஓரிடத்தில் அசைவற்றுக்  கிடக்க அவனது உணர்வும், ஆன்மாவும், அந்த உடலை விட்டும் வெளியேறி,  வேறொரு இறந்து கிடக்கும், ஒரு உடம்பில் போய் குடியேறுதல்..

‘’ஒரு விஞ்ஞானியாக இருந்து கொண்டு  லூசு மாதிரி உளறுகிறாய்’’

‘இல்லடா.. எனக்கு இதில் முதற்கட்ட  வெற்றி கிடைத்திருக்கிறது..’’

‘’பைத்தியமா உனக்கு?  இதெல்லாம் வெறும் சித்து விளையாட்டு.. சும்மா புராணங்கள் சொல்லும் கப்சா’’

‘’இல்லடா..சித்து விளையாட்டல்ல..சித்தர்களின் கலை... உனக்கு திருமூலரைத் தெரியுமா.. கேள்விப்பட்டிருக்கிறாயா?’’

‘’ திருமந்திரமாலை இயற்றிய திருமூலர்தானே.. ஆளைத் தெரியாது கேள்விப்பட்டிருக்கிறேன்’’

‘’இற்றைக்கு சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மெய்ஞ்ஞான சித்தர் பெருமான் திருமூலர்.  அவர்தான் முதன் முதலில் கூடுவிட்டுக் கூடு  பாய்ந்தவர். தன் உடலை ஓரிடத்தில் மறைத்து வைத்து விட்டு வேறொரு இறந்த உடலுக்குள் போய் அங்கேயே வாழ்ந்தவர்..இந்த வித்தையை பரகாயம் என்றும் சொல்வதுண்டு.. அதாவது teleportation.. அட்டமா சித்திகளில் இது மகா உன்னதமானது. சிரமமானது. யாராலும் இலகுவில் சித்தி பெற முடியாதது..’’

‘’பைத்தியமாடா உனக்கு.. திருமூலராம் திருமூலர். அந்தாள் எதையோ சொல்ல, நீ அதை பிடித்துக் கொண்டு வேலை மினக்கெட்டு இத்தனை வருஷமாய் அதிலேயே மூழ்கிக் கிடக்கிறாய். கொவிட்டுக்கு தடுப்பூசி கண்டு பிடித்த பெருமைக்குரிய நீ முற்றிலும் மூடநம்பிக்கையில் மூழ்கிப் போனாய்..’’

‘’ ஆனால், வெற்றி கண்டு விட்டேன்.’’ என்று முணுமுணுத்த  விஞ்ஞானி பரஞ்சோதி,  மெதுவாக எழுந்து போய் அலுமாரிக்குள்ளிருந்து ஒரு பழைய நூலை எடுத்துக் கொண்டு வந்தார். பிரித்து ஒரு பக்கத்தைக் காட்டினார்.

‘’இதைக் கொஞ்சம் படித்துப் பாரேன்.. நீ முடிப்பதற்கிடையில் நான் உனக்கு ஒரு நல்ல கோப்பி தயாரித்துக் கொண்டு வருகிறேன்’’

            சிவானந்தன், அவர் காட்டிய பக்கத்தைப் படிக்கத் தொடங்கினார்..

௦௦

‘’........ ஆவடுதுறையிறைவரை வழிபடுதலில் ஆராத பெருங்காதலையுடைய சிவயோகியார், அத்தலத்தை அகன்று செல்லும் பொழுது காவிரிக் கரையிலுள்ள சோலையிடத்தே பசுக் கூட்டங்கள் கதறி அழுவதைக் கண்டார். அந்தணர்கள் வாழும் சாத்தனூரிலே தொன்றுதொட்டு ஆனிரை மேய்க்கும் குடியிற் பிறந்த ஆயனாகிய மூலன் என்பவன் சர்பம் தீண்டி இறந்தமையால் அதனைத் தாங்காத பசுக்கள் உயிர் நீங்கிய அவனது உடம்பினைச் சுற்றிச் சுழன்று வந்து மோப்பனவும் கதறுவனமாகி வருந்தின.

மேய்ப்பான் இறந்தமையால் பசுக்களைடைந்த துயரத்தினைக் கண்ட அருளாளராகிய சிவயோகியாரது உள்ளத்தில் 'இப்பசுக்கள் உற்ற துயரத்தினை நீக்குதல் வேண்டும்' என்றதோர் எண்ணம் திருவருளால் தோன்றியது. 'இந்த இடையன் உயிர்பெற்றெழுந்தாலன்றி இப்பசுக்கள் துயரம் நீங்கா' எனத் திருவுளத்தெண்ணிய தவமுனிவர், தம்முடைய திருமேனியைப் பாதுகாவலானதோரிடத்து மறைத்து வைத்து விட்டுக் கூடுவிட்டுக் கூடு பாய்தல் (பரகாயப்பிரவேசம்) என்னும் பவன வழியினாலே தமது உயிரை அவ்விடையனது உடம்பிற் புகுமாறு செலுத்தித் திருமூலராய் எழுந்தார்.

 எழுதலும் பசுக்களெல்லாம் தம் துயரம் நீங்கி அன்பினால் அவரது உடம்பினை நாத்தழும்ப நக்கி மோந்து கனைத்து மிகுந்த களைப்பினாலே வாலெடுத்து துள்ளிக்கொண்டு தாம் விரும்பிய இடத்திற் சென்று புல் மேய்ந்தன. திருமூலநாயனார் அதுகண்டு திருவுளம் மகிழ்ந்து ஆனிரைகள் மேயுமிடங்களிற் சென்று நன்றாக மேய்த்தருளினார். வயிறார மேய்ந்த அப்பசுக்கள், கூட்டமாகச் சென்று காவிரியாற்றின் முன்துறையிலேயிறங்கி நன்னீர் பருகிக் கரையேற, அப்பசுக்களைக் குளிர்ந்த நிழலிலே தங்கி இளைப்பாறும்படி செய்து பாதுகாத்தருளினார்.

சூரியன் மேற்றிசையை அணுக மாலைப்பொழுது வந்தது. பசுக்கள் தத்தம் கன்றுகளை நினைத்துத் தாமே மெல்ல நடந்து சாத்தனூரை அடைவனவாயின. அப்பசுக்கள் செல்லும் வழியிலே தொடர்ந்து பின்சென்ற சிவயோகியார். பசுக்கள் யாவும் தத்தமக்குரிய வீடுகளிற் சென்று சேர்ந்த பின்னர் அவ்வூர் வழியில் தனியே நிற்பாராயினர்.

௦௦

‘’இந்தா, கோப்பி.. குடி’’

‘’அட என் மக்கு விஞ்ஞானியே.. இதையாடா நீ ஆராய்ந்து வெற்றி கண்டாய்.. என்ன உன்னால் இப்படிக் கூடு விட்டுக் கூடு பாய முடியுமாடா...’’

‘’சந்தேகமில்லாமல்... இதற்கான முதற்கட்ட வெற்றியை அடைந்து விட்டேன்.. உண்மையாகவே.. இதைப் பார்த்தாயா... ?’’

            மேசைமீது செத்துப் போய்க் கிடந்த இன்னொரு சிவப்புக் கம்பளிப் புழுவைக் காட்டினர் விஞ்ஞானி பரஞ்சோதி.. ‘’ நேற்று இந்தப் புழுவின் உள்ளே மூன்று நிமிஷம் நான் வாழ்ந்தேன்’’

‘’அடப் பேயா..லூசா...’’ சட்டெனக் கதிரையை விட்டும் எழுந்தார் சட்டத்தரணி சிவானந்தன்.. அவரது உடல் வெடவெடத்து நடுநடுங்கியது..

‘’உண்மையாடா நீ சொல்வது? நான் இதை கடைசிமட்டும் நம்ப மாட்டேன்..’’

“சந்தேகமில்லாமல் உண்மை.. இப்போது நான் இதை உனக்கு செய்து காட்டப் போகிறேன்..பார்க்கிறாயா..?  இந்த பரிசோதனையில், ஒரு மூன்று நிமிடம் மட்டுமே நான்  அந்தப் புழுவின் உள்ளே வாழ முடிகிறது.... அங்கு வாழ்நாளை நீடிக்கும் முயற்சியில் மும்முரமாய் இருக்கிறேன்.. இந்த ஆராய்ச்சியின் பெறுபேற்றை நான் சட்டரீதியாக அணுகும் வண்ணம் இதன் காப்புரிமையை தயாரித்து தரும் பெரிய பொறுப்பை உன்னிடம் ஒப்படைக்கத்தான் உன்னை இங்கு அழைத்தேன்’’

‘’நீ செய்வது சட்டவிரோதம்’’

‘’சட்டபூர்வமாக்கத்தானே உன்னை அழைத்தேன்.’’

‘’என்னால் முடியாது.. நன்றாக யோசித்துப் பார்.. நீ ஒரு காலத்தில் வேறே  ஏதாவது ஓர்  உடலில் புகுந்து வந்து யாரையாவது கொலை செய்து விட்டு உன் சுயத்துக்கு மீண்டால்...? சட்டப்படி உன்னை யாராலும் தண்டிக்க முடியாது போகும்.. என்னை மன்னித்து விடு, இது என்னால் முடியாது..’’  என்று கூறிவிட்டு விரைவாக எழுந்து வெளியேறினார் சட்டத்தரணி சிவானந்தன்.

‘’கொஞ்சம் பொறு.. இதைப் பார்க்காமல் போகிறாயே..’’

‘’என்னது?  இப்போ நீ கூடு விட்டு கூடு பாயப் போகிறாயா?’’

‘’ஏன் மாட்டேன்? நீ, என் பால்ய வயது முதலே நண்பன். உன்னிடம் இதைக் காட்டாமல் யாரிடம் காட்டுவேன்.. சற்று இப்படி இரு..’’

‘’இந்தப் புழுவுக்கு உள்ளேயா..?’’

‘’ஆம், இது சாதாரண புழு இல்லை..இது  சிவப்பு கம்பளிப்புழு...அம்சாக்டா லாக்டீனியா என்பது இதன் விலங்கியல் பெயர்.. முட்டையிலிருந்து புழுவாகி,பூச்சியாகி உருவும் அருவும் மாறுகிற விசித்திர உயிரினம் இது.. இதற்குள் புகுந்து பின் மீள்வது சுலபம் நண்பா.. ‘’

பயத்துடனும் ஒரு விசித்திர ஆர்வத்துடனும் கதிரையில் அமர்ந்தார் சிவானந்தன். விஞ்ஞானி பரஞ்சோதி தன் கையில் ஊர்ந்து கொண்டிருந்த அந்த இன்னொரு சிவப்புக் கம்பளிப்பூச்சியை மேசையில் வைத்தார்.  அதன் தலையை நன்றாக மூடி,  மூச்சுத் திணறச் செய்து, சாகடித்தார்..  சற்று நேரம்  அதையே பார்த்துக் கொண்டிருந்தார்..

‘’நண்பா....இப்போது, இந்தப் புழு செத்து விட்டது.. நான் சற்று அந்த அறையில் போய் இருக்கிறேன். பயப்படாதே... நீ  எக்காரணம் கொண்டும் அந்த அறைக்குள் வந்து விடாதே.. சற்று நேரத்தில் நான் இந்தப் புழுவுக்குள் நுழைந்து உன்னை அழைக்கிறேன்..பார்..’’

என்ற விஞ்ஞானி பரஞ்சோதி ஒரு வெற்றிப் பார்வையுடன் தன் பிரத்தியேக அறைக்குள் நுழைந்து மறைந்தார்.. சிவானந்தன் வெலவெலத்துப் போய் பயத்துடன் மேசை மீது செத்துக் கிடந்த அந்தப் புழுவையே இமை கொட்டாது பார்த்துக் கொண்டிருந்தார்..

            ஒரு ஐந்து நிமிடத்தில், திடீரென அந்தப் புழுவின் உடலில் ஒரு அசைவு தென்பட்டது.. பயத்தில் திடுக்கிட்டு எழுந்தார் சிவானந்தன்.. தொடர்ந்து, இறந்து கிடந்த அந்தப் புழு மெல்லக் கண் விழித்து உடலைச் சுருட்டி, பின் மீண்டும், உடலை நீட்டிச் சுருக்கி இவரை நோக்கி நகர்ந்து வந்தது.  

‘’ஆ’’ என்று கத்திய சிவானந்தன், விஞ்ஞானி புகுந்த அறையை நோக்கி ஓடி கதவைத் திறந்தார். அங்கே, கட்டிலில் ஆடாது அசையாது, தலையில் ஒரு  நீள் வட்டமான இனம் புரியாத ஒரு கருவியைப் பொருத்தியபடி, படுத்துக் கிடந்தார் பரஞ்சோதி.. 

‘’டேய்..பரஞ்சோதி...பரஞ்சோதி’’ என்று, பயத்துடன் இரைந்து  கத்தினார் சிவானந்தன்.. அவரைப் பிடித்து உலுக்கினார்.. ஆனால், விஞ்ஞானி  நிச்சயமாக இறந்திருந்தார்... உடல் விறைத்திருந்தது..

‘’என்ன முட்டாள்தனம் இது..’’

பயந்து போன சிவானந்தன் வெளியே ஓடி, வந்தார்.. மேசைமீது கிடந்த புழு இப்போது தரையில் ஊர்ந்து கொண்டிருந்தது.. அப்போதுதான்,யாரும்  எதிர்பாராத அந்த விடயம் நடந்து விட்டது.

தரையில் ஊர்ந்து வந்து கொண்டிருந்த புழுவை, கவனிக்காத சிவானந்தனின் கால்களில் சர்ரக்கென மிதிபட்டு நசுங்கி....

௦௦

விஞ்ஞானி பரஞ்சோதி, தரையிலும், அவரது அறையிலுமாக இறந்து கிடந்தார்.

௦௦